Saturday, November 28, 2009

கலைமாமணிகள்

இன்று 28.11.2009 அன்று தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழகத் தலைநகரில் நடைபெறுகிறது. கலைமாமணி விருதுக்கும் அதறகு மேலும் திறனும் தகுதியும் நிரம்பிய மூன்று பேர் எனக்கு மிகவும் பரிச்சயம், அவர்களிடம் பணி புரிந்திருக்கிறேன் என்கிற தகவலை மகிழ்வோடும் சிறிது கர்வத்தோடும் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களோடும் வணக்கங்களோடும் என் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!

RPok

திரு. ரமேஷ் பிரபா, சன் டிவி தொடங்கிய முதல் நாளில் ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர். சராசரியான கிராமத்து தமிழனுக்கும் தொலைக்காட்சியில் பங்கெடுக்கும் வாய்ப்புத் தருகிற, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ந்து பலவருடங்கள் சாதணை புரிந்து வரும் ”பாட்டுக்கு பாட்டு” தொடங்கி இன்றைய “சந்தித்த வேளையில்” நிகழ்ச்சி வரைக்கும் வெற்றிகரமான சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர்!!

குங்குமம், தினகரன் உட்பட பற்பல சுவாரஸ்யமான டிவி விளம்பரங்களை உருவாக்கியவர். தமிழகத்தின் மிகவும் வெற்றிகரமான் விளம்பர நிறுவணங்களில் ஒன்றான ”கேலக்ஸி”யை உருவாக்கியவர். பிற்பகுதி 80களில் விகடன் பத்திரிக்கையில் இவர்  எழுதிய வியாபார நுட்ப கட்டுரைகளே இன்று தமிழில் பல ஃபிஸினஸ் பத்திரிக்கைகள் கொடிகட்டி பறப்பதற்கு முன்னோடி! இன்று ஒவ்வொரு மாதமும் பல கல்வி நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களை சந்திக்கும் கல்வியாளர். . கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பல வெற்றிகரமான புத்தகங்களை எழுதியவர் எனும் பண்முகத்தன்மை வாய்ந்த இவரிடம், இவரின் கேலக்ஸி நிறுவனத்தில் 1998ல் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால்தான் எனக்கு சென்னை வர முடிந்தது.

அன்று தொடங்கி நான் திரு. ரமேஷ் பிரபா அவர்களிடம் கவணித்து வருவது அவருடைய பரந்த வாசிப்பு இயல்பு, ஆழமான தமிழுணர்வு, தான் IIMல் MBA படித்ததை எந்த சூழலிலும் பிரஸ்தபிக்காமல் எல்லா மேடைகளிலும் தமிழர்களிடம் வயது பேதமின்றி தமிழில் பேசும் ஆர்வம். தேவைப்படும்போது மட்டும் மிளிரும் ஆங்கில மொழியறிவு, அபாரமான நிர்வாக ஆற்றல், எல்லோரையும் மரியாதையாக நடத்துவது, எந்த கடிணமான சூழலிலும் முகத்தில் புன்னகை, செயலில் பொறுமை காட்டுவது. அவர் கருத்தோடு முரண்பட்ட என் கருத்துக்களையும் பொறுமையாக கேட்பது, அதற்கு எனக்கு விளக்கமளிப்பது  என  அவரைக் குறித்த என் ஆச்சர்யங்கள் முற்று பெறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!

இன்று வரைக்கும் கேலக்ஸியின் பல முக்கியமான தயாரிப்புகளில் எனக்கு / என் F1 ஸ்டுடியோஸுக்கு வேலைகள் கொடுத்து வரும் அவருடைய முன்னாள் ஊழியன் என்பதே எனக்கு பெருமைதான். ஆனால் தொடக்கம் முதல் எல்லா சந்தர்ப்பங்களிலும், பல பெரிய சபைகளிலும், சமூகத்தின் பல பெரியவர்களிடத்தும் அவர் என்னை அறிமுகப்படுத்தும் சொல் “ இவர் தங்கமணி பிரபு, நம்ம நண்பர்!”

  BSSok

திரு. பாஸ்கர் சக்தி, சிறுகதை எழுத்தாளராகவும் நிருபராகவும் விகடனின் அவருடைய பல சுவாரஸ்யமான படைப்புகளில் தன் எளிமையான தனித்தன்மையால் பல பெரிய தலைகளின் புருவங்களை வில்லாக வளைத்தவர். இவருடைய ”ஒரு நாள் ஒரு இடம்” என்கிற சென்னை நகரின் முக்கியப்பகுதிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் செய்த ரிப்போர்டிங், கடந்த பல வருடங்களாய் எல்லா பத்திரிக்கையாலும் பின்பற்றப்படுகிறது.  இவருடைய “ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்” தொடரில்  முதன் முதலில் அறிமுகப்படுத்திய யதார்த்த கிராமத்து மணிதர்கள் தமிழ் எழுத்துலகுக்கு மிகவும் புதியவர்கள். நான் காதலாகிப்போய் விகடனுக்குள் தொலைபேசியில் இவரை தேடிப் பிடிக்க, லைனில் வந்தவர் “ஓ நீங்கதானா அந்த “சன் டிவி நம்ம நேரம்” இயக்குனர், ரொம்ப நல்லாயிருக்குங்க!” என எனக்கு பாராட்டை பதிவு செய்து ஆச்சர்யம் கொடுத்தார். 

அவள் விகடனில் இவர் “காற்று வளையம்” தொடரில் சொன்ன அழகான காதல் புதிது! சக மணிதர்களை, தம் எண்ணங்களை, தம் உணர்வுகளை  மதிப்பீடு செய்து செயல்படும் அந்த காதலர்கள் தமிழ் வாசகர்களுக்கு முற்றிலும் புதியவர்கள், அது வெற்றிகரமான நகரத்து கதை, பல பெண் வாசகிகள் “பாஸ்கர் சக்தி என்பது ஒரு பெண் எழுத்தாளரின் புனைப்பெயர் என்றே நம்பினார்கள்! . நகரமயமாதலால் கிராமங்கள் ரியல் எஸ்டேட் கட்டங்களுக்கு மாறுவதை பதிவு செய்யும் இவரின் சிறுகதைகள் நகரத்தவர்க்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை தூக்கலான இவருடைய ”அழகர்சாமியின் குதிரை”, கிராமங்களில் தொலந்துபோய்விட்ட சாமியாடிகளின் வாரிசுகளை, செல்லாக்காசாகிப்போன உள்ளூர் குறி சொல்பவர்களின் சோகத்தை மிக அற்புதமாக பதிவு செய்திருந்தது! அங்கு தொடங்கி “மெட்டி ஒலி” ”கோலங்கள்” ”மேகலா” மற்றும் சில தொலக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக தன் வாமன பாதங்களில் அடி எடுத்து வைத்தவர்; ”எம்டன் மகன்” தொடங்கி ”வெண்ணிலா கபடிக்குழு” என்று திரைப்பட வசன சாதணைகள் இன்னும் வரப்பாகும் சில திரைப்படங்களுக்கு வசனம், பிரசுரமாகியிருக்கும் பிரபலமான கதைதொகுப்புகள் என்று உயரங்கள் தொடுவதே தன் இயல்பென தொடர்ந்தாலும், நான் முதல் நாள் பார்த்த தொனியில் இம்மியும் மாறாதவர்.

எனக்கு கோலங்கள் தொடரில் நடிக்கும் வாய்ப்புக்காக இயக்குனர் திரு. திருச்செல்வத்திடம் அறிமுகம் செய்துவைத்தவர். பிற்பாடு நான் சிலகாலம் கோலங்கள் தொடரின் அசோசியேட் இயக்குனனாக வேலை பார்த்த போது இவரின் வசனங்களில் வரும் ஆங்கிலப் பிரயோகங்களைப் பார்த்து இவரிடம் என் ஆச்சர்யங்களை சொன்ன போதுதான், தான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்த விவரத்தையே சொன்னார். அது தவிர சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவரும் கூட! இவர் அதீதமாக கோவப்பட்டோ, வருத்தப்பட்டோ, ஆச்சர்யப்பட்டோ நான் பார்த்தேனில்லை! அனால், யாழ்பாணம், கிளிநொச்சியில் தொடங்கி முல்லைத்தீவு வரை நம் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்ட செய்திகளை பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவர் முகம் கடுமையாக வாடியிருந்ததை கண்டேன்.

இவர் குறித்த என்னுடைய படுபயங்கரமான ஆச்சர்யமே இவருடைய எளிமைதான். அவர் சொந்த ஊரான தேனி மாவட்டத்து வடப்புதுப்பட்டியில் எவ்வளவு சாவகாசமாக இருப்பாரோ அப்படித்தான் இந்த சந்தடி மிகுந்த சென்னையிலும் இருக்கிறார். எப்போதாவது இவரோடு பேசிக்கொண்டு நடக்கையில், சென்னை எம்ஜிஆர் நகர் கூட எனக்கு கிராமம் மாதிரியாக படும். இவருக்கான ஒரு பாராட்டு விழாவில் பல்வேறு எழுத்தாளர்கள் பேசும் போதுதான் “பாஸ்கர் சக்தி என்கிற ஒரு எழுத்தாளனின் படைப்புலக விஸ்தீரணம் என்க்கு அறிமுகமானது. மிரண்டு போவதற்கான வாய்ப்பை அவர் எனக்கு கொடுக்காமல் வழக்கம் போல் “அப்புறம் என்ன பிரபு, சாயங்காலம் வெளிய போவமா? ஃப்ரியா இருந்தா வாங்க தலைவா” என்று அவர் உயரத்துக்கு என்னை இழுத்துக்கொள்வார்.

Thiruselvamok

திரு. திருச்செல்வம், மெட்டி ஒலி தொடரில் இணை இயக்குனர் என்பதை விட சந்தோஷ் என்கிற புதுவிதமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் என்பதே இவரின் பொது ஜன அறிமுகம்.

ஆனால், அதற்கு முன்பு திரைப்படக்கல்லூரியில் சவுண்ட் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு தயாரிப்பாளர் திரு.பாலாஜியின் சுஜாதா ரெகார்டிங் தியேட்டரில் வேலை பார்த்தவர். பிறகு பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டரில் இசைஞானி இளையாராஜாவின் ஆதர்ஷ சவுண்ட் என்ஜினியர்களில் ஒருவராக இருந்தவர் என்பது பலருக்கு தெரியாத செய்தி.

பிறகு “கோலங்கள்” -  தனது முதல் படைப்பிலேயே பல சாதனைகள் செய்தவர். 6 வருடத்துக்கும் மேலாய் வெற்றிகரமாக, சுவாரஸ்யமாக, நல்ல ரேட்டிங்கில், பார்வையாளர்க்ளின் 9மணி போதையாக எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கும் தொடர் ”கோலங்கள்”.  தென்னிந்தியாவிலேயே அதிகமான நாட்களை கடந்த தொலைக்காட்சித் தொடர்! அற்புதமான திரைக்கதை யுக்தி. யதார்த்த அங்கதம் அல்லது சமூக அக்கறையை அடிநாதமாய் கொண்ட கதாபாத்திரங்கள்,  திரைக்கதையின் போக்கை அனேகமாக எல்லா திசைகளிலும் வெற்றிகரமாக பயணிக்க செய்தது இவரின் ஸ்பெஷ்ல் டச்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில், லைட்டிங் செய்யும் இடைவெளியில், பலத்த சப்த்ங்களுக்கு இடையே, அருகிலேயே ஒருவர் வளவளவென பேசிக்கொண்டிருந்தாலும் அந்த நொடியில் தனக்கு தோன்றிய வசனத்தையோ, காட்சியையோ டக்கென்று எழுதிவிடுவார். நடிகர்களுக்கு பரிபூரண சுதந்திரம் தந்து தனக்கு வேண்டியதை பெற்றுவிடுவதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

இயக்குனர் திரு. பி. வாசு அவர்களிடம் 2 படங்கள் பணிபுரிந்துவிட்டு, திரு. பாஸ்கர் சக்தி அறிமுகத்தில் இவரிடம் நடிப்பு வாய்ப்பு கேட்டேன். என் தேசிய நாடகப்பள்ளி பட்டறைகள் அனுபவங்களை கேட்டுக் கொண்டார். சில நாட்களிலேயே வாய்ப்பும் கிடைத்தது. நடிக்கும் போது நான் சொல்லும் மாற்றங்களை அல்லது யோசனைகள மறுதலிக்காமல் கேட்பார், அதை செய்ய அனுமதியும் கொடுப்பார். ஒளிபரப்பில் பார்க்கும்போதுதான் நான் செய்த மாற்றங்கள் அவருடைய காட்சியமைப்புக்குள் உட்கார்த்தி வைத்திருப்பார்.

பிற்பாடு அசோசியேட் இயக்குனனாக இவரிடம் 9 மாதங்கள் வேலை பார்த்தேன். ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், ரீரிக்கார்டிங், டிஸ்கஷன் என லொகேஷன் பார்ப்பது வரை எல்லா இடத்துக்கும் போனேன். சாதரணமாக அது நடைமுறையில் இல்லை என்றாலும் எனக்கு அவர் தடை சொல்லவேயில்லை! பைக்கில் இருவருமாகவே சுற்றுவோம், நல்ல அனுபவம்!

இப்போது மீண்டும் 4 வருடங்களுக்கு பிறகு சிறிதுகாலம் என் கதாபாத்திரம் வலம் வந்தது! அதே பழைய இயல்போடுதான் இருக்கிறார், பேசுகிறார், பழகுகிறார். ரேட்டிங், வியாபாரம் என்கிற வலைபின்னல்களுக்கு மத்தியில் “கோலங்கள்” தொடரில் அவர் உருவாக்கிய “தோழர்” கதாபாத்திரம் அவருடைய தமிழுணார்வுக்கு ஒரு சான்று! . 6 வருடத்தில பல நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளார், தொலைக்காட்ட்சி தொடருக்கான சில இலக்கண மாற்றங்கள் உட்பட! மேலும் ஒரு தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு, இயக்கம், சினிமா நடிப்பு, இயக்கம் என தன் அடுத்த வெற்றிப் பயணத்தை தொடர்கிறார்.

group

வெவ்வேறு வயது, திறன் மற்றும் அனுபவங்களுடையவர்கள் எனினும் வெற்றிகரமான திரு. ரமேஷ் பிரபா, திரு.பாஸ்கர் சக்தி, திரு. திருச்செல்வம், மூவருக்கும் பொதுவான விஷயங்களாக நான் கருதுவது உழைப்புக்கு அஞ்சாமை, அசராத நகைச்சுவையுணர்வு, மேற்பரப்பில் எப்படியிருந்தாலும் உள்ளே ஒரு அமைதியான நீரோட்டம் மாதிரியான சிந்தனை ஓடுவது என்பதே!

தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில், இந்த வருடத்தின் மூன்று கலைமாமணிகள் எனக்கு நல்லா தெரியுமே என்று பெருமையடித்துக்கொள்வதில் நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்!!





 
 
   
   

Thursday, November 26, 2009

இந்திய / தமிழ் / துக்க / துரோக பதிவுகள்

26/11
கடல் மார்க்கமாக ஒரு வருடத்துக்கு முன்னாடி பாக்கிலிருந்து வந்த வெறியர்களால் கோடீஸ்வர தாஜ் ஹோட்டலில் தங்கிய பணக்காரர்கள் பலியானதுக்கு மொத்த நாடே துக்கம் அனுஷ்டிக்க சொல்லி கூவும் வடநாட்டு நல்ல இதயங்களே,

கடநத பலவருடமாக, ஏன் 2 நாள் முன்பு வரைக்கும் இலங்கை வெறியர்களால் கொல்லப்பட்ட/துன்புறுத்தப்பட்ட ராமேஸ்வர மீனவர்களும் இந்தியர்கள்தானே! என்ன செய்யலாம்?

சவுகரியமா தரையிலயும் பக்கத்து கட்டடத்துலயுமிருந்து 26/11ஐ பதிந்த ஊடகங்களே, ராமேஸ்வரம் வாறீங்களா! கடலுக்கு போவோம்!

தரமற்ற ஃபுல்லட் ப்ருப் கவசத்தால் உயிரிழந்த காவலதிகாரியின் மனைவியின் வழக்குக்கு பதிலில்லை! பிடிபட்ட தீவிரவாதியை பராமரிக்க பலகோடி செலவு! தாய் மண்ணே, வணக்கம்!!

27/11 - மாவீரர் தினம்
கடந்த வருடங்களில் இல்லாத அளவு இந்த 2009ஆம் வருடம் தமிழகத்தில் 26/11 விடுதலைப்புலிகள் தலைவர் திரு, பிரபாகரன் பிறந்த நாளும், 27/11 மாவீரர் தினமும் பின்பற்றப்படுகிறது! அவர் இறந்ததாக சொல்லப்பட்டபோது அவர் படத்தை முன் அட்டையில் போடாத தமிழனை ஏமாற்றி சுரண்டி வாழும் தமிழ் ஊடக முதலாளிகள், அவரைப் பற்றி கட்டுக்கதைகளும், மாவீரர் தினம் பற்றிய சஸ்பென்ஸ் செய்திகளும் பதிக்கையில் அவர் புகைப்படத்தை முன்னட்டையில் பயன்படுத்தி சர்குலேஷன் உயர்த்திக்கொள்வதை என்னவென்று சொல்ல! அரசியல்வாதிகளை மட்டுமல்ல, மக்கா உங்களையும் கவணிச்சுட்டுண்டி இருக்கோம்!!


நுண்ணரசியல்
இயக்குனர் டி. ராஜேந்தர், மணிவண்ணன், நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பற்றி இதுவரை உருவாக்கப்பட்ட கேலியான அல்லது காட்டுத்தனமான பிம்பம் 30வயதை கடந்தவர்களுக்கு, அது கேலி மட்டுமே என்று புரியும்! ஆனால் இன்றைய 15-20கள் எந்த விவரமுமே தெரியாமல் நக்கல் சிரிப்பு சிரிப்பது இயல்பாகிவிட்டது! இளையவர்களை நொந்துகொள்ளமுடியாது! ஆனால் இந்த மாதிரி கிராமத்திலிருந்து வந்து வென்றவர்கள் அல்லது உயர்சாதியை சேராதவர்கள் பற்றிய பிம்பங்களை உருவாக்கியவர்கள்தான் இன்றைக்கு எந்த விலையும் போகாத, சினிமாவில் துளியும் இடமில்லாத நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரை ஒரு மகா காமெடியன்கள் என்கிற பிம்பத்தையும் உருவாக்கியுனர்!

நடந்தைவை பற்றி கவலையில்லை!

ஆனால் இன்றும் சினிமாவை பற்றி மெத்த அறிந்தவர்கள் அல்லது அத்தாரிட்டி என்கிற உருவகத்தோடு சினிமா விமர்சனம் மற்றும் கிசுகிசு என்கிற பெயரில் தொலைக்காட்சி, வாரந்திரி மற்றும் வலைப்பூ வரை எழுதுபவர்கள், இயக்குனர் பாலா, அமீர், தருன்கோபி தொடங்கி நடிகர்கள் ரித்திஷ் மாதிரியானவர்களைப் பற்றி தவறான அல்லது கேலியான பிம்பங்களை உருவாக்குகிறார்கள்! இதன் மகா கொடுமை என்னவெனில், இப்படி எழுதும் வெங்காயங்கள்தான் / அவர்கள் வாரிசுகள்தான் பிறபாடு கேவலமான சினிமா எடுக்கிறார்கள்!!மக்கா, நீங்க முதல்ல என்ன எழுதி பேர் வாங்க ஆசைப்பட்டீங்க! அப்புறமா எப்ப, எப்படி சினிமாவ பத்தி பேச ஆரம்பிச்சு ஒரு கூட்டத்த கூட்டி வச்சுருக்கீங்கன்னு பார்த்துக்கிடுதாண்டி இருக்கோம் மாப்பிளைகளா!

Tuesday, November 10, 2009

வாழு அல்லது வாழ வேண்டாம், விட்டுடு!!

Co-Existense
நேற்று விடாமல் பிடிவாதமாக அடித்த மழையை பொருட்படுத்தாது ரேஷன் வாங்க சென்றவர்களிடம் ’40ரூவா பருப்பு முடிஞ்சு போச்சும்மா! 72ருவால இருக்கு வாங்கிகீறீயா?’ என்றவனின் குடும்பத்தைச் சேர்ந்த கடந்த மூன்று தலைமுறை பெண்களையும் வைதுவிட்டு திரும்பினார்கள்.

சான்ஸே இல்ல மச்சான், கியர் வெண்ணேய் மாதிரி விழுது. பார்க்கறப்பவே வண்டி என்னா லுக்கு தெரியுமா! விலை 20 லட்சம், சென்னைல இந்த மாதிரி 2 பைக்குதான் இருக்குதாம். இம்போர்டட், அதான் கஸ்டம்மரையே மாடலாக்கி, கஸ்டம்மர் வீட்டிலயே, அவங்க தெருவுலயே பைக்க ஓட்ட சொல்லி ஷூட்டிங் பண்ணியாச்சு. லிட்டருக்கு 4 கிலோமீட்டர் போகுமாம்! அந்த பைக் ஷெட்டுலதான் லைட் வச்சோம். ஷெட்டே எங்க வூடு சைஸ் இருக்குதுடா! அவங்க வீட்ல மொத்தமா 4 பைக்கு இருக்குதாம், எல்லாமே காஸ்ட்லி! த்தா மெர்சலாயிட்டமா!

Season
மழை, மிகவு சுவாரஸ்யமானது. சாரலடிகையில் வேடிக்கை பார்க்கவும், மழை நேரத்தில் நடைப்பாதைக் கடையில் தேனீர் குடிக்கவும், கொஞ்சம் பழகிவிட்டபின் லேசான சாரல் முகத்திலடித்தபடி பைக்கை மெல்லமாக ஓட்டுவதும் சொர்க்க அனுபவம்! படுக்கையில் போர்த்தி கொள்கிற பெட்ஷீட் அல்லது கோர்த்துக்கொள்கிற இணையின் விரல்கள், காய்ந்த தலையணை உறையில் வரும் லேசான முடமுடப்பு என எல்லா இடத்திலும் கனப்பை தேடிப்பிடிக்கவேண்டியிருக்கும். வருடம் முழுக்க எரிந்து கொல்லும் சென்னையின் அழகுப் பக்கம் - மழைக்காலம்!

ஆனால் இந்த வருடம் மகா முரன்! மழை முதல் ஒருநாள் தொடரை ஆரம்பித்தவுடனேயே பலவீதிகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது நாள் மழை தொடர, வியாசர்பாடி தொடங்கி, டீ நகர் அரங்கநாதன், துரைசாமி என எல்ல சப்வேக்களும் மிதக்கத் தொடங்கிவிட்டது! சென்னை தெருக்களில் தேங்கும் தண்ணிர் அத்தனையும் அழுக்கு கூவத்தின் வழித்தோன்றல்கள். அடுத்த வாரம் பெரிய டவல் போர்த்தி வாரி அணைத்தபடி தனியாக போர்டு வச்ச டாக்டர்களிடமும், மருத்துவமணைகளுக்கும் குழந்தைகளை பொத்தி எடுத்து செல்வார்கள். காய்ச்சல் படிந்த முகம் வாடிய பிள்ளைகள், ஊசிக்கு பயந்து அழும் குரல் அனேகமாக எல்லா தெருவிலும் கேட்கும்!

கிபி2005, 2007 இரண்டு வருடமும் சென்னையை பேய்மழை மிக மோசமாக புரட்டி போட்டது. ஆழிக்காலம் மாதிரி சென்னை மருவிப்போவதற்கு முன்பு, இந்த நாட்களில் உள்ளது போலத்தான் காட்சியளித்தது. பிறபாடு வீட்டிற்குள்ளும் தெருவிலும் 5 அடிக்கு தண்ணீர் ஓடியது. பிளாஸ்டிக் சாக்கை தலைக்கு போர்த்திய மணிதர்களைத் தாங்கி தர்மோகோல் தொடங்கி ரப்பர் மிதவைகள் வரை தெருவில் வலம் வந்தது மறக்கவில்லை. அப்படியான தெருக்களில் சாக்கடையும் மலக்கழிவுகளும் சேர்ந்து கலந்தது! சாதாரண, ஏழை சென்னைவாசிகள் முழுகிப்போன தங்கள் வீட்டிலிருந்து கைக்கு கிடைத்த பண்டங்கள், துணிமனிகளை எடுத்துக்கொண்டு மழைக்கு நடுவே குடும்பம் குடும்பமாய் வேறு இடம் தேடி நடப்பதைப் பார்த்தபோது முதலில் மனதுக்கு கஷ்டமாக இருந்தது, இரண்டொரு நாளில் பழகிவிட்டது. அவர்கள் எங்கு போகிறார்கள், என்ன செய்வார்கள் என்கிற கேள்விக்கு விடை தேடினால், தேவையா இந்த பிறப்பு என நாம் தற்கொலை முடிவை எட்டும்படியாகிவிடும் என்று தெரிந்ததால் யாரிடமும் கேட்கவில்லை! அனேகமாக பணக்காரர்கள் அல்லது கஷ்டப்பட்டு போராடி முன்னேறி ஆனந்த விகடன் அல்லது ஜூனியர் விகடனில் சுயசரிதை கட்டுரை எழுதியவர்கள் தவிர்த்து பெரும்பாலானோர் கெட்டும் பட்டணம் வந்தவர்கள்! வாழ்ந்தா மலை, செத்தா மயிரு!

இத்தனை அனுபவங்களையும் மனசில் உள்வாங்கி வைத்துக்கொண்டேயிருப்பதால் இந்த வருடம் மழையை ரசிக்கவே முடியவில்லை. தினசரிப் பத்திரிக்கைகள் இப்போதே தொடங்கி விட்டார்கள். எந்தவிதமான கூடுதல் பேட்டா இல்லையென்றாலும் ’எப்படியாவது செயிக்கனும்டா’ என்று ஒரு வெறியில் கம்பேணி போட்டோகிராபர்கள் அலைந்து எடுத்து வந்ததை ’சென்னையில் மக்கள் அவதி’ என தலைப்பிட்டு ஒரு முழு பக்கத்துக்கு போட்டோக்கள் மட்டும் போடுகிறார்கள். ஊரிலிருந்து சொந்தங்களிடமிருந்து பதறியபடி போன் வருகிறது. என்ன சொல்ல? யாரை வைய்ய? வடபழனி பஸ்ஸ்டாண்டில் மழையின் போது 2ஆம் 3ஆம் ப்ளாட்பாரங்களில் தண்ணீர் தேங்கும். முதல் ப்ளாட்பாரம் பாதிக்காது. கோயம்பேடு தொடங்கி, டீ நகர், அடையாறு வரைக்கும் இந்த மேடுபள்ள புவியியல் சென்னையின் சிறப்புகளில் ஒன்று. ஆனால் டைம்ஸ் தொடங்கி, தந்தி வரைக்கும் குறி பார்த்து தண்ணிர் தேங்கிய இடமாக பார்த்து போட்டோ போடுகிறார்கள். பள்ளி, கல்லூரிப் படிப்புக்காக பிள்ளைகளை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ள பெற்றோர்கள் இந்த பேப்பர்களைப் பார்த்துவிட்டு அதீதமாய் கற்பணை செய்து பயப்படுவது சென்னை மழை வளர்க்கும் ஊடுபயிர்!

சின்ன வயதில் அம்மாவிடம் ’ரஃப் நோட்டுதாம்மா’ என்று சமாதானம் சொல்லி சாதா கப்பல், கத்திகப்பல் விட்டு விளையாடிய, மனசோடு நெருங்கிய நண்பன் மாதிரி ஒட்டிக்கொண்ட முதல் மழை இப்போது ‘ஓமன்’ ’எக்சார்ஸிஸ்ட்’ பேய் படங்களின் முதல் காட்சி மாதிரி பயத்துக்கு மனசை தயார் செய்கிறது.

பயந்துட்டேயிருக்கனும். தொடர்ந்து மழையடிச்சா கடைக்காரன் கதவ இழுத்து பூட்டிட்டு போயிடறான். அதுவும் சரிதான் அவன் வீட்டை காவல் காக்கனுமில்ல! வருமானம் உள்ளதோ இல்லையோ, சம்சாரிகள் கைல இருக்கற காசப்பூராத்தையும் கொண்டு மளீகை சாமான் வாங்கிப்போடனும். மழை 2-3 நாள் நல்லா அடிச்சு பேஞ்சுதுன்னா 4-5 நாளைக்கு பாலும் பேப்பரும் வராது. ஹார்லிக்ஸைத்தான் தண்ணில கரைச்சு புள்ளைகளுக்கு ஊட்டனும். பெரிய பாட்டில வாங்கிடனும்! குடும்பம் நடத்தனும்னா அரசு வேலைல இருக்கனும், இல்லையா ஐடில வேலைல இருக்கனும்! ஃபேங்கில சேர்த்து வச்சு பொங்கி திங்கலாம்! பொண்டாட்டி நகைய வைக்கறதுக்கு மட்டும் ஃபேங்க் போறவனெல்லாம் பார்ட் டைம்மா திருடத்தான் போகனும்!!

Tuesday, November 3, 2009

நகரம் - போதி மரங்கள் சூழ்ந்த கசாப்புத்தொட்டி




நகர வாழ்கையில் அன்றாடப்பயணங்கள் பல போதி மரங்களை கடந்து வந்து போய் கொண்டிருக்கிறது. சைதை பாலத்தில் எதுவோ மோதி எவனோ ஒருவன் சட்டை முழுக்க ரத்த நிறமானது மட்டும் கும்பலுக்கு நடுவே தென்படுவதை பார்த்து துக்கிப்பதற்குள் பஸ்ஸ்டாண்ட் வந்துவிடுகிறது. உதவிக்கு பஸ்ஸிலிருந்து பாய்ந்து செல்லும் கட்டாயம், மாத சம்பள கட்டாயத்தை விடவும் குறைவாகத்தான் உள்ளது! “என்னவாம்என்றால் எவனாவது சொல்லிவிடப்போகிறான். ரத்தம் கசிய ஆபிஸில் அதையே பிரஸ்தபித்தால் ஆச்சு! ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் மனசுக்குள் என் சட்டை முழுக்க ரத்தமாவது தொடங்கி ஆஸ்பத்திரிக்கு அம்மா ப்ளாஸ்கில் காப்பி வாங்கி வருவது வரை காட்சிகள் மின்னல் வேகத்தில் ஓடுகையில் கைவிரல் கழுத்திலுள்ள மெல்லிசான சங்கிலியை நிரடி உறுதிப்படுத்திக்கொள்கிறது.




அடுத்து பஸ் புறப்பட புதிய பயணிகள், புதிய நெரிசல், சின்ன இடைவெளிகளை நிரப்பும் காலை நேரத்து சென்னையின் வெயில் காற்று என்பதாய் பயணம் தொடர்கிறது. இது அலுவலகத்துக்கான பயணமல்ல என்று தெரிவதேயில்லை. பயணச்சீட்டு என்னவோ அப்போதைக்கு போகும் இடத்திற்குத்தான் வாங்கப்பட்டுள்ளது என்பதால் பயணம் அங்கேயே முடிந்து விட்ட்து என்றா அர்த்தம்! நில்லாத பயணம் பலவித தடைகள் தாமதங்களை ஈடு செய்யும் குறுக்கு வழிகளோடு நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இரவுத் தூக்கத்தில் கூட செயல் நிற்பதில்லை என்றால் பயணமும் நிற்கவில்லை என்றுதானே பொருள்! தொடக்கம் தொட்டிலில் என்றால் பயணத்தின் முடிவு எங்கே என்பது புரிபடுபவன் பாம் பாம் என ஹாரனை முழக்கி வண்டியை முடுக்க மாட்டான். போகுமிடம் சீக்கிரம் வந்துவிடுமே!!




நகரம் மனசை வடம் மாதிரி சங்கிலி போட்டு கட்டி அங்குசத்தால் குத்தி குத்தி பழக்குவது, தும்பிக்கை உயர்த்தி சலாம் போட தொடங்கையில்தான் தெரியவருகிறது. டூ லேட்!! குறிப்பாக நகரத்தில் மனசு சாப்பிட்டு பழகுகிறது! இமைகளை திறந்து உணவு உட்கொள்ளும் கண்கள் நகரத்தில் எல்லோர்க்கும் வாய்த்துள்ளது. உணவு எல்லாம் அரூபமானவை. இங்கும் ஏற்றதாழ்வு உண்டு. படித்தவன் மெல்லிய சிரிப்போடு ஸ்பூனும் ஃபோர்க்கும் வைத்து அழகாக அறுத்து எடுத்த துண்டை நனைத்து உண்கிறான். மற்றபடி அதிகப்படியான எண்ணிக்கையில் வாழும் காமன் மேன் புரோட்டா சால்னா டைப்பில் கிழே சிந்துவது தெரியாமல் திணித்துக்கொள்கிறான். இருவருக்குமே எதிராளியின் ரத்த சுவை பிடித்திருக்கிறது. எதிரே இருப்பவன் நண்பனோ எதிரியோ, அவன் நெஞ்சுக்குள் கையை விட்டு துடிக்கும் பாகத்தை கிடைத்த அளவுக்கு கிள்ளி எடுத்து பற்களால் அரைத்து லபக்கென்று விழுங்கிவிடுகிறார்கள். அனேகமாக எல்லோர் கைகளிலும் ரத்தம் அரூபமாய் நனைத்த வண்ணம்தான் உள்ளது. கண்ணில் தின்றது போக எஞ்சிய ரத்தம் வடிகிறது! துடைத்துக்கொள்கிறான். அது சரி, இழந்தவன் இதை எப்படி ஈடு செய்து கொள்கிறான்? அவன் வீட்டில்தான் அந்த காம்பென்சேஷன் நடக்கிறது!! அதற்குத்தானே கல்யாணம் கட்டி, கடித்து கடித்து பிள்ளைகளையும் பெற்றாயிற்று. சில நேரங்களில் பிள்ளைக்கறியும் வாழ்கைத்துணையின் ரத்தமும் சுவை அலுத்துப்போனால்......? பக்கத்து வீட்டுக்காரனோடு பசி தீர ரத்தம் கொடுத்து எடுக்கலாம். நிறையப்பேர் இதில் ஒபிசிட்டிக்காரர்கள். பசித்துக்கொண்டேயிருக்கும்! வீட்டில் பொண்டாட்டியை தின்னதொடங்கியவன். வயதான பெற்றோர்களையும் ருசிபார்த்தது போதாமல் பயணம் செய்யும் சாலை, போக்குவரத்து என எத்தனை உண்டோ எல்லா இடத்திலும் ரத்தப்பசியோடு அலைவான்!. சிக்னலில் சிகப்பு எரிகையில் தாகத்தில் உள்ளே உலர்ந்து போகத்தொடங்கும்! எவனாவது ஸ்கூட்டரை கொண்டுவந்து பின்னால் உரசி தாகம் தனிக்கிறான். வெயிலில் காயும் போலிசுக்கும் பசியாறுகிறது. வாகன ஹாரன்கள் ஒருசேர ஒலித்து தூணைப்பிளந்து வந்த நரசிம்ம அவதாரம், இரன்யகசிபுவின் குடலை கிழித்து ரத்தம் எடுத்து முகத்தில் பூசிக்கொள்வதை கொண்டாடுவது மாதிரி உற்சாகிக்கிறார்கள். என்ன செய்ய, எல்லோர்க்கும் பசி, தாகம்!




மேம்போக்கான பயணங்கள் அதிகம் தென்படாத விடுமுறை நாட்கள் பலருக்கு உபவாச நாள். அவலும் வெல்லமும் கலந்து அரை வயிருக்கு போட்டுவிட்டு மறுநாள் விடிவதற்காக காத்திருக்கிறார்கள். சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்ல, நான் ஞாயிற்கிழமையும் வேலை செய்கிறேன் என்பவன் ரத்த தாகத்திற்கு அடிமையானவன் அல்லது 6 நாட்கள் தப்பித்த இடத்திலிருந்து 7ஆம் நாளும் தப்பித்துக்கொள்ள செய்யும் உபாயமெனவும் கொள்ளலாம். எப்படியோ விடுமுறை நாளிலும் மற்றவர்களுக்கு கொஞ்சமாவது ரத்தம் சிந்தத்தான் செய்கிறது. பழக்கத்தை விட முடியாதே!




இதன் உச்சம் ஒன்று உண்டு! அது தனிமையில் தன் ரத்தம் குடிப்பது! கணக்கெடுப்புக்கெல்லாம் உள்ளாகாது சென்னையில் நிறைய உணர்வு ஏழைகள் உண்டு. அவர்கள் தனியாக யாருடைய துணையுமின்றி தன்னையே அறுத்து தின்று கொள்கிறார்கள். கடிபட்ட இடம் கொஞ்சம் சைஸ் குறைவாக மீண்டும் வளர்ந்து விடுகிறது. இதில் வித்தியாசமானவர்கள் நம்மை விருந்துக்கழைத்து தன்னையே சமைத்துக் கொடுப்பார்கள். பழகிப்போயிருந்தாலும் அதிக உப்பு உடலுக்கு ஆகாது என சிலகாலம் இந்த சொந்த விருந்து வைப்பவர்களை தவிர்க்க வேண்டியிருக்கிறது. அவர்களும் பாவம் அலுத்துப்போய் விடுகிறார்கள். மனசுக்கு சாப்பிட எதுவுமேயில்லாமல் எட்டுப்பக்கமும் கன்னி கன்னியாய் இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி வேலியில் ஏதாவதொரு டிஸார்டர்(Disorder) வகையில் ஒட்டிக்கொள்கிறார்கள். பசிக்கு டிரிட்மெண்ட். உணவு முறை மாறுகிறது. தனி மணிதன் உணவு முறையை மாற்றி என்ன பயன்? அவன் ஒரு பிசகில்லாத நேர்கோட்டில் பயணிக்கிறான், துன்பமேயில்லை என்ற நினைப்பில்..!! ஆனால் அந்த நேர் கோடு சிறிது தொலைவில் மெல்ல மெல்லமாக  வட்டமான வடிவத்தை அடைந்து விட்டிருக்கிறது. இனி இங்கே எதுவுமே நோயில்லை, முழுமையான மருந்துமில்லை. காரணம், இது நகரத்தின் வாழ்கைமுறை!




சரி கசாப்பு தொட்டிகள் பார்த்தாயிற்று! போதி மரங்கள் எங்கே? எல்லா பஸ்ஸ்டாப்பும், குளியலறையும், அலுவலக மேசையும் எங்கெங்கே தனிமை வாய்க்கிறதோ அதெல்லாம் போதி மரம்தான்! சும்மா இருத்தல் தவம், ஞானமோ பைத்தியமோ கிடைக்கலாம்!. ஆனால் அதைப் பெற கொஞ்சம் அமைதி தேவைப்படுகிறது. என்ன செய்ய பழகிப்போன சினம் பொங்கும் நெஞ்சம், பயந்து போய் போதி மரத்தின் அடி மரத்தை அறுத்து கறிவெட்ட வாகாக இழைத்துக்கொள்கிறது! அடுத்த முறை கவனமாக பாருங்கள் உங்கள் போதிமரம் எத்தனை தூரம் அறுக்கப்பட்டுள்ளது என்பதை! பயணத்தை நிறுத்த முடியாது! வழியை மாற்றிக்கொள்ளலாம்!!